தமிழக செய்திகள்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவை மருத்துவ கல்வி இயக்குனரகம் கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி தொடங்கியது.

சென்னை,

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவை மருத்துவ கல்வி இயக்குனரகம் கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி தொடங்கியது.

மாணவர் சேர்க்கைக் குழு

விண்ணப்பப்பதிவு கடந்த 23-ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, இளங்கலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40 ஆயிரத்து 760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயிரத்து 726 விண்ணப்பங்களும் என மொத்தம் 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டை விட குறைவு

இது கடந்த ஆண்டுகளுடனான விண்ணப்பங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, குறைவு ஆகும். கடந்த ஆண்டில் 72 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கால அவகாசம் நீட்டிப்பு

இந்நிலையில் ஜூலை 23ம் தேதியுடன் விண்ணப்பக் காலம் முடிந்த நிலையில் ஜூலை 27ம் தேதி (நாளை) மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.