சென்னை,
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்காக அரசு அகவிலைப்படி உயர்வை 2 - 3 மாதங்கள் தாமதமாக அறிவிப்பது வழக்கம். விதிகளின்படி அகவிலைப்படி 50 சதவீதத்தைக் கடக்கும் போது அது அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும். கடந்த 2024 ஜனவரி 1ம் தேதி அன்றே அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியது. ஆனாலும் அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படவில்லை.
இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய மந்திரிசபை செயலருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இத்தகைய இணைப்பை அரசு செயல்படுத்தாது என்று மத்திய நிதித்துறை இணை மந் திரி பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அகவிலைப்படி உயர்வானது 3 சதவீதம் வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் 49 லட்சம் அரசு ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் என்று கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை விரைவில் கூட உள்ளநிலையில், அங்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நிலுவையுடன் கூடிய நிதிச் சலுகைகள் கிடைக்கும். தற்போது வரை 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி விகிதம், இந்த 3 சதவீத உயர்விற்குப் பின் 63 சதவீதத்தை எட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.