போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பண்டா தாலுகாவில் 2 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 60-க்கு மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு வாந்தி, கண்பார்வை மங்குதல், காய்ச்சல், தலை சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. நேற்று முன்தினம் அவர்களில் 11 பேர் பலியானார்கள்.
இந்நிலையில், நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இன்னும் 30 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட 30 பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது பாட்டில்களை வைத்திருக்கிறார்களா என்று கிராம பிரதிநிதிகளுடன் இணைந்து வருவாய்த்துறை குழுக்கள் வீடு, வீடாக சோதனை நடத்தின. பக்கத்து மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள லலித்பூரில் இருந்து கள்ளச்சாராயம் வினியோகிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. முதல்-மந்திரி மோகன் யாதவ், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.