தமிழக செய்திகள்

அமோனியா வாயு கசிவு விபத்து... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவால் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை இன்று 14 ஆக உயர்ந்துள்ளது.

அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை 9 வடமாநில பெண் தொழிலாளர்கள் பலியானார்கள். அவர்களில் 5 பேரின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

பலி எண்ணிக்கை உயர்வு

நேற்று சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வடமாநில பெண் தொழிலாளி சுபாசி ஜூவாங்ஸ் (வயது 24) என்பவரும் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆனது.

இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபாசி ஜங்கா (வயது 24) மற்றும் இரண்டு பெண்கள் இன்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்தனர். இதன்மூலம் வாயு கசிவில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.