சென்னை,
அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கையை நடப்பாண்டில் 15% ஆக உயர்த்த முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழக சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தின் போது கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதியில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் என்றும், அரசு உதவிப்பெறும் கல்லூரிகளிலும் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளது. இந்த ஆண்டு 21 கல்லூரிகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் பட்சத்தில் வரும் ஆண்டுகளில் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில் நடப்பாண்டு 25% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேப்போல் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் ஏற்கனவே 10% இருக்கும் கூடுதல் மாணவர் சேர்க்கையை 15% ஆக உயர்த்த முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.