தமிழக செய்திகள்

தயாரிப்பாளர் கே.ராஜன் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த மனவேதனை அடைந்தேன் - ராமதாஸ்

திரைப்படத் துறையின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து துணிச்சலாக குரல் கொடுத்து வந்தவர் கே.ராஜன்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்த் திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளரும், சிறந்த கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான தயாரிப்பாளர் கே.ராஜன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். திரைப்படத் தயாரிப்பாளராக மட்டுமன்றி, திரைப்படத் துறையின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து துணிச்சலாக குரல் கொடுத்து வந்தவர் கே.ராஜன். தன்னம்பிக்கை, நேர்மை, மன உறுதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த அவர், பொது வாழ்விலும் சமூக அக்கறையுடன் செயல்பட்ட நல்ல மனிதர்.

தமிழ்த் திரைப்படத் துறையின் நலனுக்காக தொடர்ந்து போராடிய ஒரு மனிதர் இவ்வாறு உயிரிழந்திருக்கிறார் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இழப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது உயிரிழப்புக்கான காரணங்களை காவல்துறை விரைந்து மற்றும் முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படக் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.