தமிழக செய்திகள்

‘யூ-டியூப்’ சேனல்களில் அவதூறு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

‘யூ-டியூப்’ சேனல்களில் அவதூறு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

சென்னை,

சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேர்ந்து புகார் அளிக்க வந்தனர். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பாக 2 யூ-டியூப் சேனல்கள் மீது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசியதாகவும், அவர்களை கைது செய்யவும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

யூ-டியூப்-ல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை மட்டம் தட்டும் செயல் அடிக்கடி நடந்து வருகிறது. கண் பார்வையற்றவர்கள் போல் நடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களால் நிஜத்தில் கண் பார்வையற்றவர்களை பெரும்பாலானோர் நம்ப மறுக்கின்றனர். நாங்களும் ஏமாற்றுகின்றோம் என்ற எண்ணம் அதிகமான பொதுமக்களிடம் வந்துவிட்டது. இதனால் சாலையை கடப்பதற்கு கூட உதவி புரிய யோசனை செய்கின்றனர். இந்த நிலையில் 2 யூ-டியூப் சேனல்களில் கண் பார்வையற்றவர்களை பற்றி மிகவும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள் மேலும் தொடராமல் இருக்க 2 சேனல்களின் உரிமையாளர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT