மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் பச்சை பயறு, உளுந்து அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. வழக்கமாக குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் மூலம் மாநில அரசு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை விவசாயிகளிடம் இருந்து பச்சை பயறு, உளுந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
ஆனால் நடப்பு ஆண்டில் தற்போது வரை கொள்முதல் செய்வதற்கான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதுகுறித்து வேளாண் விற்பனை கூட அலுவலர்களிடம் முறையிட்டும் ஆணை வரவில்லை என்று பதில் வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வெயில் அடித்தாலும், மழை வந்தாலும், தேர்தல் வந்தாலும் பாதிப்படைவது விவசாயிகளாகிய நாங்கள் தான்.
அறுவடை செய்து வைத்துள்ள பயறுகளை பாதுகாப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இட வசதி இல்லாமல் தவித்து வருவதாகவும் இதற்கு உடனடியாக தீர்வுகண்டு விவசாயிகளின் விளை பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து காக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.