கோவை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அருள்மிகு பண்ணாரி மாரியம்மனின் திருவுருவ புகைப்படத்தை வழங்கி, தமிழக மக்கள் சார்பாக வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலம் அருள்மிகு பண்ணாரி திருக்கோவில்.
ஈரோட்டின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் இந்த அம்மனின் அருளால் நன்மை, பாதுகாப்பு மற்றும் வளம் கிடைக்கும் என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
இந்நிகழ்வின் போது என்னுடன் நமது மாநில தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் முன்னாள் மாநில தலைவர் சகோதரர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.