மு.வீரபாண்டியன் 
தமிழக செய்திகள்

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் - மு.வீரபாண்டியன் கோரிக்கை

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்பு கூறியது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

சென்னை,

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கோரிக்கை. இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம். நாள் 28.08.2026.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

குருவை சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய வேலைகள் இல்லாததால் விவசாய தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள்

விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. அதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. எனவே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும்.

பழங்குடிச் சங்கம் மாநாடு நாளை மாமல்லபுரத்தில் நாளை நடைபெறுகிறது.

தனித்துறை

பழங்குடியினர் நலத்தை கவனிக்க தனித்துறையை உருவாக்க வேண்டும். வனத்திலிருந்து பழங்குடியினரை வெளியேற்ற நீதி மன்றங்கள் உத்திரவிட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட் சமீபத்திய உத்திரவு மேகமலையில் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. வன உரிமைசட்ட படி வன உரிமைகள அங்கீகரிக்கும் பணிகள் முடியும் வரை வனத்திலிருந்து யாரையும் வெளியேற்றமாட்டோம் என்ற நிலையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.

சத்துணவு தொகுப்பு

தமிழ்நாட்டில் பழங்குடி பெண்கள் ரத்தசோகையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு அம்மாநில பழங்குடியினருக்கு,உணவு தாணியம்-முட்டை-நெய்-பயறுகள்- பருப்புகள்-சமையல் எண்ணெய் போன்றவைகள் அடங்கிய சத்துணவு தொகுப்பினை வழங்கி வருகிறது. தமிழ் நாடு அரசும் இதைப்போன்றவொரு திட்டத்தை தமிழ் நாட்டு பழங்குடியினருக்கு கொண்டு வரவேண்டும்.

மேகமலை பகுதியில் மக்களை வெளியேற்ற அரசு முயல்வதால் ஒரு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற கொடுமைகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்கள் 28 ஆம் தேதி வேலை நிறுத்தம்.

பணி நிரந்தரம்

13 சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளன. 23 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. பணி நிரந்தரம் வழங்க வேண்டும் . காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய வழங்க வேண்டும். காலி பாட்டில்களை திரும்ப பெற கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

வரவேற்பு

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்பு கூறியது. ஆனால், அதே பகுதியில் தனியார் மதுக்கடைகளை அனுமதித்தது சரியல்ல. இது முரண்பாடாக உள்ளது. அவைகளை அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

மேகதாது அணை

இடதுசாரி மாணவர் அமைப்புகளை கண்காணித்தல் தொடர்பான சுற்றறிக்கைக்கு முதல்-அமைச்சரும், தலைமை செயலாளரும் விளக்கம் அளிக்க வேண்டும். மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்டக்கூடாது. மத்திய அரசு கட்ட அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் உறுதியாக நின்று இந்த அணை கட்டப்படுவதை தடுத்திட வேண்டும். இப்பிரச்சனைக் குறித்து தமிழ்நாட்டில் ஒத்தக் கருத்தை உருவாக்கிட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.

மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்

உள்ளாட்சித்துறை தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். கும்மிடிப்பூண்டி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களில் இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷ் அரசால் சேமித்து வைக்கப்பட்ட குண்டுகள் பல இடங்களில் புதைந்திருப்பதாகவும் அது எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் நிலவுகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

வந்தே மாதரம் பாடலின் சர்ச்சை

வந்தே மாதரம் பாடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளையும் சேர்த்து முழுமையாக பாடவேண்டும் என அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் கூறிவரும் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. அவர்களின் கருத்துகள் நாட்டின் மதச்சார்பின்மைக்கும், அரசியல் சட்டத்திற்கும், பன்முகத்தன்மைக்கும் எதிரானது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதாகும்.

நடவடிக்கை

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராடிய பொழுது பெல்லட் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது அத்துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவலர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் மதச்சார்பற்ற கொள்கையை உறுதியோடு கடைபிடிக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கார் இல்லாதவர்களுக்கு கார் வாங்கிட அரசு கடன் வழங்கலாம்.

பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும்.

புதிய மருத்துவமனை

பொது சுகாதாரத்துறையை தமிழ்நாடு அரசு வலுப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டை ரூ 5 லட்சத்திலிருந்து, ரூ 25 லட்சமாக அதிகப்படுத்துவதின் மூலமாக மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் முழுமையாக இலவசமாக வழங்கிவிட முடியாது. இதனால் அரசு காப்பீட்டு நிறுவனத்திற்கு கட்டவேண்டிய பிரிமியம் தொகை ரூ.1400 கோடியிலிருந்து ரூ.5000 கோடிக்கு மேல் சென்று விடும். இதனால் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளுக்குமே அதிக லாபத்தை கொடுக்கும். இந்த ரூ.5000 கோடி ரூபாயில் அரசே புதிய மருத்துவமனையும் கட்ட முடியும், தரமான சிகிச்சை இலவசமாக வழங்க முடியும்.

மக்கள் பாதிப்பு

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு காப்பீட்டு அட்டை இல்லாவிட்டால் சிகிச்சை மறுக்கப்படுகிறது. காப்பீட்டு அட்டை இருந்தாலும் காப்பீட்டு நிறுவனங்கள் ஏதேனும் சில சிறிய காரணங்களை கூறி காப்பீட்டை மறுத்து வருகின்றன. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மருத்துவக்காப்பீடு

பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்துவதற்கு பதில் மருத்துவக்காப்பீடு அடிப்படையிலான சுகாதாரத் துறையாக, தமிழ்நாடு சுகாதாரத் துறையை மாற்றுவது மக்கள் நலனுக்கு எதிரானதாகும். இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக்குழு வருகிற 05.09.2026 ஆம் தேதி இந்தியக் கம்யூனுஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் பாலன் இல்லத்தில் நடைபெறுகிறது.

பேரணி

06.10.2026 ஆம் தேதி திருச்சியில் இடதுசாரிகளின் பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சிறப்பு ரெயில் அனுமதியை ரத்து செய்ததற்கு கண்டனம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற 01.10.2026 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மாற்றத்தை நோக்கி... என்ற முழக்கத்துடன் மிகப் பிரம்மாண்டமான பேரணி நடைபெறுகிறது.

பேரணி நடைபெறும்

இந்தப் பேரணிக்கு தமிழ்நாடு மற்றும் கேரளத்திலிருந்து செல்வதற்காக சிறப்பு ரெயிலுக்கு முன்பணம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று மத்திய அரசு அந்த ரெயிலுக்கு அனுமதித்தர மறுத்து விட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியை முடக்குவதற்காகமத்திய அரசு சதி செய்துள்ளது. ஆனாலும், கட்சித் தோழர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேறு மார்க்கத்தில் செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர். வெற்றிகரமாக அந்த பேரணி நடைபெறும்.

இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சு.மோகன்குமார், மாநிலக்கு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, லி.உதயக்குமார், க.இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறினார்.