மதுரை,
மதுரை இராஜாஜி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் செலவில் நிமிடத்திற்கு 200 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. பின்னர் அதனை வகைப்படுத்தியும், ஆக்சிஜன் பற்றாக்குறைகளை சரி செய்ததுடன், மூன்றாம் நிலையில் வந்தாதலும் நிரந்தரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மதுரையில் நான்கு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது இரண்டு செயல்பட்டு வருகிறது. மதுரை மே 26 -ஆம் தேதி 1166 ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது 70 ஆக குறைந்துள்ளது.
டெல்டா பிளஸ் கொரோனா தொற்றை சாதாரண கருவிகளில் கண்டறிய முடியாது. டெல்டா பிளஸ் கொரோனா தொற்றை கண்டறிய நவீன ஆய்வக கருவிகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றை வாங்கி தமிழகத்தில் சென்னை மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.