சென்னை,
டெல்லியின் ஜங்புரா பகுதியில் அமைந்துள்ள மதராசி பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கையை டெல்லி நிர்வாகம் தொடங்கி உள்ளது. இதனால் 3 தலைமுறைகளாக அங்கு வாழ்ந்துவரும் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதராசி பகுதி தமிழர்களுக்கு உடனடி தீர்வு, நீதி கிடைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "தமிழ் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுகளை இடிப்பது எவ்விதத்தில் நியாயம்?. மதராசி பகுதி தமிழர்களுக்கு உடனடி தீர்வு, நீதி கிடைக்க வேண்டும்
அந்த பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் வீடுகளை, கால்வாய் அகலப்படுத்தும் திட்டத்திற்காக இடிப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த மக்களுக்கு டெல்லி ஆட்சியாளர்கள் உடனடியாக மாற்று இருப்பிடத்தையும், வீடுகளையும், வசதிகளையும், ஏற்படுத்தித் தந்து பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.