சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மறு மேம்பாட்டு பணிக்காக இடிக்கப்பட உள்ளது. இதையடுத்து அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதன்படி உதயநிதி ஸ்டாலின் இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சுன் சோங்கம் ஜடக்சிரு ஆகியோர் நேற்று குடியிருப்புவாசிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்று இடம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது தி.மு.க. செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்பட தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.