தமிழக செய்திகள்

மனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பல தலைமுறையாக கோவில், மடம், அறக்கட்டளை, வக்பு போர்டு, தேவாலயம் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளை பொது ஏலம் என்ற பெயரில் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் ராயர், இணை செயலாளர் மேகநாதன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாயூரநாதர் குடியிருப்போர் சங்க தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலைய துறை அலுவலக வளாகத்தில் போலீசார் பெருமளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT