தமிழக செய்திகள்

16 ஆயிரம் பேரை பாதித்த டெங்கு காய்ச்சல்: நிர்வாக சீர்கேட்டின் உச்சம்! - சீமான் குற்றச்சாட்டு

எவ்வித நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

என்ன செய்கிறது சுகாதாரத்துறை?

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றது. டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு சுகாதாரத்துறை? மிக மெத்தனமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சிய அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்

மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர், உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT