சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்கிறது. அதன் தொடர்ச்சியாக மேலும் 4 நாட்களுக்கு மழைபெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்கள், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை என மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், நாளை (சனிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 25 (நாளை மறுதினம்) மற்றும் 26-ந்தேதிகளில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், அவலாஞ்சி 12 செ.மீ., பந்தலூர் 7 செ.மீ., கூடலூர் பஜார், நடுவட்டம் தலா 6 செ.மீ., சின்னக்கல்லாறு, வால்பாறை, மேல் கூடலூர் தலா 5 செ.மீ.' உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.