சென்னை,
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. தற்போது சென்னை சூளை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மகள் திரிவேணி (18 வயது). இவர், தெலுங்கானாவைச் சேர்ந்த யஷ்வந்த என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக யஷ்வந்த், திரிவேணியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அவரது மாமா பெண்ணுடன் யஷ்வந்த பழகி வருவதும் திரிவேணிக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் விரக்தி அடைந்த திரிவேணி, தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் திரிவேணியின் அறையை சோதனை செய்தபோது அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அதில் அவர், “அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். என்னால் யஷ்வந்தை மறக்க முடியவில்லை. அவர் என்னை ஏமாற்றிவிட்டு, அவரது மாமா பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே தற்கொலை செய்கிறேன்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக யஷ்வந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு அவரை தேடி வருகின்றனர்.