சென்னை,
நேபாளம், ரசுவா மாவட்டத்தில் உள்ள போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என நடிகர் சிம்பு பதிவிட்டுள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் வடக்கே ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ரசுவாகடி பகுதியில் லெண்டே கோலா உள்ளிட்ட ஆறுகள் ஒன்றிணைந்து போடேகோஷி ஆறாக பாய்கின்றன.
இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆற்றின் இருபுறங்களிலும் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 93 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேபாள சுற்றுலா வாரிய தகவலின்படி, வெள்ளத்துக்கு பிறகு 750 சுற்றுலா பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களில் 133 பேர் இந்தியர்கள். தமிழகத்தை சேர்ந்த 57 பேரில் 20 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 37 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால், பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் சிம்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவால் மனவேதனை அடைவதாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், பாதிக்கப்பட்ட அனைவரும் மற்றும் இன்னும் மீட்கப்படக் காத்திருப்பவர்கள் ஆகியோருக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர்களின் பாதுகாப்பு மற்றும் மனவலிமைக்காகப் பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.