தமிழக செய்திகள்

தண்டையார்பேட்டையில் வளர்ச்சித் திட்டப்பணிகள்; மத்திய வட்டார துணை ஆணையர் ஆய்வு

பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் செடிகள் நடுதல் உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

துணை ஆணையர் ஆய்வு

இன்று (06.07.2026) மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக் தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36, ஷர்மா நகர் முதல் தெருவில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணி, சிட்கோ பிரதான சாலையில் நடைபெற்று வரும் நடைபாதை புனரமைப்புப் பணி மற்றும் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி, வார்டு-37க்குட்பட்ட, கிருஷ்ணமூர்த்தி நகர, கணபதி தெருவில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி, வார்டு-43க்குட்பட்ட வியாசர்பாடி பாலத்தில் உள்ள சாலை மையத்தடுப்பில் நடைபெற்று வரும் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் செடிகள் நடுதல் மற்றும் அழகுப்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய வட்டார துணை ஆணையர் அவர்கள், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-76க்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, தூர்வாரும் பணி, வார்டு-75க்குட்பட்ட ஓட்டேரி லிங்க் சாலையில் கட்டப்பட்டு வரும் சிறு விளையாட்டரங்கப் பணி, வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி லிங்க் சாலையில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, 74ஆவது வார்டு அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை கட்டடப் பணி, வார்டு-65க்குட்பட்ட அஞ்சுகம் நகர், 4ஆவது தெருவில் கட்டப்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை கட்டடப் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணி, தூர்வாரும் பணி, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர்கள் ஏ.ராஜ்குமார் (தண்டையார்பேட்டை), ஜி.சொக்கலிங்கம் (திரு.வி.க. நகர்) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.