தென்காசி,
தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது குற்றாலமும், அங்குள்ள அருவிகளும் தான். இந்த அருவிகளில் குளிப்பதற்காகவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வருவது வழக்கம்.
சீசன் முடிவடைந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் மேம்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குற்றாலம் மெயின் அருவிக்கே சிறப்பு அடையாளமாக விளங்கிய மிகப்பெரிய பாதுகாப்பு வளைவானது தற்போது தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டது. மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை வெள்ளம் இழுத்து செல்லாதவாறு பாதுகாப்பு வளைவு அமைக்கப்பட்டு இருந்தது.
தனித்துவமிக்க இந்த பாதுகாப்பு வளைவானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற் பட்ட வெள்ளப்பெருக்கின் பொழுது ஆங்காங்கே வளைவு பகுதியில் சில இடங்களில் சிமெண்டு பெயர்ந்து காணப்பட்டதோடு ஆங்காங்கே கம்பிகளும் வெளியில் தெரிந்தது. இது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததால் அதனை பொக்லைன் எந்தி ரம் மூலம் இடித்து அகற்றி விட்டு புதிதாக பிரமாண்ட முறையில் கட்ட உள்ளனர்.
மேலும், குற்றாலம் மெயின் அருவியின் முன் பகுதியில் உள்ள குளம் தேங்கி கிடக்கும் பகுதியை சற்று மூடி குளிக்கும் பகுதியை எட்டு மீட்டர் அளவில் சற்று அகலப்படுத்தியும், ஆண்கள் குளிக்கும் பகுதியின் கீழ் பகுதியில் இருந்து பெண்கள் குளிக்கும் மேல் பகுதி வரையில் பிரமாண்ட ஆர்ச் அமைக்கப்பட்டு எட்டு அடி உயரத்தில் ஆண்கள் பெண்கள் குளிக்கும் பகுதியை பிரிக்கும் வகையில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
அதேபோன்று பெண்கள் குளிக்கும் பகுதியை ஒட்டி பெண்களுக்கான பிரத்யேகமாக உடைமாற்றும் அறை இருந்தது. அதனையும் அகற்றி விட்டு புதிதாக கட்டுகின்றனர்.