கோவை,
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி உள்ள 7-வது மலையில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த மலை மீது செல்ல தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 5-வது மலையில் உள்ள ஒட்டன் சித்தர் சமாதி அருகே ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே வனத்துறையினர் அந்த நபரை மீட்டு கோவில் அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இது தொடரபாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள எடாங்கிமங்களத்தை சேர்ந்த தேசிங்கு ராஜன் (வயது 60) என்பது தெரியவந்தது. அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.