தமிழக செய்திகள்

3 வாலிபர்களுக்கு தர்மஅடி கொடுத்த கிராம மக்கள்

ஆடுகளை திருடியவர்கள் என நினைத்து வாலிபர்களுக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

காரைக்குடி, 

காரைக்குடி அருகே அரியக்குடியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை பாதரக்குடியை சேர்ந்த மது, விஜய் ஆகியோர் திருடிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். இதை பார்த்த வேட்டைக்காரன்பட்டி, லாவடி ஏந்தல் கிராம மக்கள் அவர்களை விரட்டி சென்றனர். அமராவதிபுதூர்-கல்லுப்பட்டி சாலையில் அவர்களது மோட்டார்சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் நின்றது. இதனால் மதுவும், விஜயும் ஆடுகளை விட்டு விட்டு அங்கிருந்த காட்டு பகுதிக்குள் சென்றனர். மேலும், அவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களுக்கு போன் செய்து பெட்ரோல் கொண்டு வர சொல்லியுள்ளனர். அதன்பேரில் 3 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். ஆனால் கிராம மக்கள் இந்த 3 பேரும் ஆடுகளை திருடியவர்களுக்கு உதவ வந்தவர்கள்தான் என நினைத்து அவர்களை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து அறிந்த சோமநாதபுரம் போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அவர்களுக்கும் ஆடு திருட்டுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடிய விஜயை கைது செய்தனர். மதுவை தேடி வருகின்றனர். 

SCROLL FOR NEXT