தமிழக செய்திகள்

தருமபுரி: டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து -டிரைவர் பலி

விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர்.

தருமபுரி,

தருமபுரியில் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி இன்று அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30 பேர் பயணம் மேற்கொண்டனர்.

விபத்து - டிரைவர் பலி

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் பகுதியில் சென்றபோது தேசிய நெடுஞ்சாலை நடப்பட்டுள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி நடைபெற்றது.

இதற்காக டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த அரசு பஸ், நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT