சென்னை,
அறவழியில் போராடிய இளம் போராளிகளுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியாகும் இது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்திய நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்விக் கனவுகள் சிதைக்கப்பட்டன.
அதேபோல், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12 ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகள், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்று மத்தி கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், பதவி விலக வேண்டும், நீட் தேர்வு பிரச்சினையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும், போராட்டம் தொடர்பான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தினர் மற்றும் மாணவர் - இளைஞர்களோடு இணைந்து, தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கிய இளைய தலைமுறையின் போராட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை, ஆர்.பி.எப்., துணை ராணுவப் படை போன்றவைகள் ஏவப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இதில் 150-க்கும் மேற்பட்ட போராளிகள் படுகாயமடைந்தனர். இதன் விளைவாக போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து தீவிரமானது.
இளைய தலைமுறையின் போராட்டத்திற்கு அடிபணிந்து, மத்திய அரசு அரசு தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது. இது அறவழியில் போராடிய இளம் போராளிகளுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியாகும்.
போராட்டத்தை முன்னெடுத்த சி.ஜே.பி. இயக்கத்திற்கும், அதனுடன் உறுதியோடு நின்று போராடிய இளம் போராளிகளுக்கும், ஆதரித்து களம் இறங்கிய இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகளுக்கும், பொதுவாழ்வு பிரமுகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நன்றி பாராட்டி, வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.