சென்னை,
தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத்துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது அவர் ஆவேசமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். அவர் பேசுகையில், 'எது பேசினாலும் நாங்கள் (தி.மு.க.) 'மிசா'வை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் 'மிசா' வரலாறு நன்றாக தெரியும்' என்று செய்கை ஒன்றை காண்பித்தார்.
அவருடைய இந்த செய்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்வது போன்று அமைந்ததால் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களின் கண்டன பதிவு வெளியிட்டனர். மு.க.ஸ்டாலினின் 'மிசா' தியாகத்தை முதல்-அமைச்சர் விஜய் தனது செய்கை மற்றும் உடல் மொழி மூலம் கொச்சைப்படுத்திவிட்டார் என்று ஆவேசமாக கூறினர்.
இதற்கு முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் அளித்தார். சட்டமன்றத்தில் கடந்த 7-ந்தேதி அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதற்கிடையே, மிசா காலத்தில் நடந்ததை குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை இன்று காலை வெளியிட்டார். இந்த நிலையில், அவரது வீடியோவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-
பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.
பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.