தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? - வேல்முருகன் கேள்வி

கேரளாவில் மலைகள் இல்லையா? அங்கு கல், பாறை, கட்டுமானத் தேவைக்கான கனிம வளங்கள் இல்லையா? கேரளாவின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் மலைகளையும் பாறைகளையும் ஏன் அழிக்க வேண்டும்.

சென்னை,

கேரளாவில் மலைகள் இல்லையா? தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கனிமப் பொருட்கள்

கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

குறிப்பாக, மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டின் போது, கேரள முதல்-மந்திரி சதீசன், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் கேரளாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கு, கேரளாவை இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று முதல்-அமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக கேரள முதல்-மந்திரி அலுவலகமே தெரிவித்துள்ளது. இது உண்மையா ?

தமிழ்நாட்டின் இயற்கை

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டிற்குள்ளேயே சாலை, பாலம், வீடமைப்பு, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு கட்டுமான மூலப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நமது தேவையை முழுமையாக உறுதி செய்யாமல் பிற மாநிலங்களின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வத்தை அனுப்புவது எந்த வகையிலும் தொலைநோக்கான நிர்வாகமாக இருக்க முடியாது.

அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நல்லுறவு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மலைகளை இழக்க முடியாது.

கேரளமாக இருந்தாலும், கர்நாடகமாக இருந்தாலும், ஆந்திரமாக இருந்தாலும், எந்த மாநிலத்தின் கட்டுமானத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையை அழிப்பதை ஏற்க முடியாது.

எனவே, கேரளாவுக்கு தனிப்பட்ட விலக்கு அளிப்பது குறித்த பரிசீலனையை, தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் உள்நாட்டுத் தேவையை முதலில் முழுமையாகக் கணக்கில் கொண்டு, இயற்கை வளத்தின் இருப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளை உறுதி செய்த பின்னரே கனிமவளப் பயன்பாடு தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும்.

வலியுறுத்தல்

வெளிமாநிலங்களுக்கு கனிமவளங்களை எடுத்துச் செல்வதில் விதிவிலக்குகளுக்கு இடமளிக்காமல், சட்டவிரோதக் குவாரிகள், அதிகப்படியான அகழ்வுகள் மற்றும் கனிமவளக் கடத்தலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.