சென்னை,
உள்நோக்கத்துடன் யாரையும் குறிப்பிடவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'ஒரே நாடு' மாத இதழின் டிஜிட்டல் பதிப்பின் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், சட்டமன்றத்திற்கு சென்று அப்பா எங்கே, அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள். வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். அதை விட்டுவிட்டு, சட்டமன்றத்திற்கு சென்று அப்பாவை தேடினால் யாருக்கு தெரியும்? இப்படிப்பட்ட நபர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என பேசினார்.
முன்னதாக, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்படும் வகையில் "அப்பாவை காணோம்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அவரது இந்த பேச்சு அடங்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
இதையடுத்து, நயினார் நாகேந்திரனை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், எக்ஸ் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சை திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.