சென்னை,
சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.
இந்த நிலையில், மானிய கோரிக்கை விவாததின் 2-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பதில் அளித்து பேசி வருகிறார்கள்.
இந்த சூழலில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தி.மு.க. அரசின் திட்டங்களை எம்.எல்.ஏ. எ.வ.வேலு பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், “காலை உணவு திட்டத்தை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதற்கான அவசியம் என்ன? புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வையுங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். முதலமைச்சர் என்பது பொதுவான சொற்சொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. ஆகையால் ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ என்றுதான் பெயர் வைத்தோம்.
ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கலாம் என கூறியபோது ஸ்டாலின் அதை மறுத்தார். முதல்வர் காலை உணவுத் திட்டம் என பெயர் வைத்தால் யாரும் அந்தப் பெயரை மாற்ற மாட்டார்கள் என ஸ்டாலின் கூறினார். நாங்கள் உருவாக்கிய திட்டத்துக்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து பிரதமர் நேருவை அழைத்துவந்து திறந்தோம். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா. காமராஜருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதிதான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை சேர்த்தார் கருணாநிதி” என்று எம்.எல்.ஏ. எ.வ.வேலு தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “திட்டங்கள் மக்கள் வரி பணத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு முன், எத்தனை திட்டங்களுக்கு நீங்கள் பெயர் மாற்றியிருக்கிறீர்கள்? காலை உணவுத்திட்டம், காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட, பொருத்தமான பெயர் வேறு எதுவும் இல்லை.
திட்டங்களின் பெயர்களை மாற்றுவது காலம் காலமாக திமுக ஆட்சியிலும் செய்யப்பட்டதுதான்” என்று அவர் கூறினார்.
இப்பொழுது சட்டப்பேரவையில் இருக்கும் இந்த கலைநயத்தோடு கூடிய மேசைகளும், மைக்குகளும் திமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் இரவு பகலாக பார்த்து பார்த்து செய்தது.
அந்த டேபிளை செய்தது நாங்கள்தான்; அந்த மைக்கை செய்தது நாங்கள்தான்; அந்த நாற்காலியை செய்தது நாங்கள்தான் என சொல்கிறார்; இது மக்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு செய்தது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.