சென்னை,
தமிழ்நாடு முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயங்கி வருகின்றன. தற்போது டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வு போன்ற காரணங்களால் லாரிகளின் வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்திட லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் முடிவு செய்துள்ளனர். வருகிற 15-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தனராஜ் தலைமையில் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள் பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சமீபகாலமாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடைசியாக லிட்டருக்கு 8 ரூபாய் வரை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஒரே தவணையாக டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டால், நாங்கள் அதற்கேற்ப லாரி வாடகை உயர்த்திக்கொள்ள முடியும்.
லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், வாடகையை உயர்த்த வேண்டியது உள்ளது. எனவே லாரி வாடகையில் 25 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்து இருக்கிறோம். இந்த வாடகை உயர்வு வருகிற 15-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளோம். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு வருந்துகிறோம்.
நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு கனரக லாரிகளில் 25 டன் எடை ஏற்றப்படுகிறது. இதில் டன்னுக்கு ரூ.1,000-ம் வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 25 சதவீத கட்டண உயர்வால் வருகிற 15-ந் தேதி முதல் கூடுதலாக ரூ.6 ஆயிரம் வரை கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.
தற்போது நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு டன்னுக்கு ரூ.1,000-ம், மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு டன்னுக்கு ரூ.750-ம், நாமக்கல்- தூத்துக்குடிக்கு ரூ.1,200 வரையும், நாமக்கல்- ஓசூருக்கு டன்னுக்கு ரூ.900-ம் பெறப்படுகிறது.
நாமக்கல்-ஈரோட்டிற்கு ரூ.500 டன்னுக்கு பெறப்படுகிறது. இவை அனைத்திற்கும் வருகிற 15-ந் தேதி முதல் 25 சதவீதம் கட்டண உயர்வு அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் வருகிற 15-ந்தேதி முதல் லாரி வாடகை கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த உள்ளனர். இதனால் லாரி வாடகை கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
உதாரணமாக, டிப்பர் சரக்கு லாரியில் இடத்திற்கு தகுந்தபடி கிலோ மீட்டருக்கு ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டணம் தற்போது நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது. வாடகை உயர்வால் இது கிலோ மீட்டருக்கு ரூ.12 முதல் ரூ.30 வரை உயரும். அதேபோல், இலகு ரக லாரிகள் தற்போது கிலோ மீட்டருக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுவும் சரக்கு மற்றும் செல்லும் ஊர்களை பொறுத்து மாறுபடும். அதாவது. புதிய வாடகை கட்டணம், ரூ.23 முதல் ரூ.60 வரை உயர வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல், கனரக கன்டெய்னர் லாரிகள் கிலோ மீட்டருக்கு தற்போது ரூ.35 முதல் ரூ.85 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுவும் ரூ.50 முதல் ரூ.110 வரை உயரும் நிலை உள்ளதாக, சரக்கு லாரிகள் டிரைவர் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்றும் எனவே இதை கருத்தில் கொண்டு சுங்க கட்டணம் மற்றும் டீசல், பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இது தவிர சிறிய ரக லாரிகள், பெரிய ஆட்டோக்களுக்கான வாடகையும் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தானாகவே உயர்ந்து விடும் அபாயம் நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.