தமிழக செய்திகள்

டீசல் விலை அதிகரிப்பு - ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறதா? உரிமையாளர்கள் சங்கம் பதில்

டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பயணிகள் கட்டண உயர்வு செய்யப்பட மாட்டாது.

சென்னை,

ஆம்னி பஸ் சங்க தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39-ல் இருந்து ரூ.95.25 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் பொதுப் போக்குவரத்து மற்றும் ஆம்னி பேருந்து தொழிலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.தமிழகத்தில் மட்டும் தினமும் சுமார் 5,800 ஆம்னி பஸ்கள், 7,700-க்கும் மேற்பட்ட டிரிப்புகளை இயக்கி, சுமார் 3 லட்சம் பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. பொதுப் போக்குவரத்திற்கு துணை நிற்கும் முக்கிய துறையாக ஆம்னி பஸ்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2024 முதல் கடுமையான பொருளாதார சிக்கல்கள், சுங்கச்சாவடி கட்டண உயர்வு, சாலைவரி, உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்திருந்த போதிலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எந்தவித பயணிகள் கட்டண உயர்வும் இன்றி ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பயணிகள் கட்டண உயர்வு செய்யப்பட மாட்டாது.

ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிகப்படியான சாலைவரி, தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து உயர்ந்து வரும் சுங்கச்சாவடி கட்டணங்கள், உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு, காப்பீடு மற்றும் அனுமதி செலவுகள் உயர்வு, மாநிலங்களுக்கு இடையேயான வரி மற்றும் அமலாக்க சிக்கல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.