கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

டிஜிட்டல் கைது எனக்கூறி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆதார் அட்டையை சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தியதால் டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறி மர்மநபர் மிரட்டி உள்ளார்.

சிவகங்கை,

டிஜிட்டல் கைது எனக்கூறி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை அடுத்த கட்டுக்குடிபட்டியை சேர்ந்தவர் சுகநந்தன் (88 வயது). சம்பவத்தன்று செல்போனில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பெங்களூரு போலீஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் சுகநந்தன் ஆதார் அட்டையை சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாகவும், அதனால் அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும் கூறி மிரட்டி உள்ளார்.

பின்னர் அந்த மர்ம நபர் ரூ.46 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். அதை நம்பிய சுகநந்தனும் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அந்த தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுகநந்தன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.