கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

டிஜிட்டல் கைது செய்து விட்டதாக மிரட்டி ஓய்வு பெற்ற அரசு பெண் மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் நடந்து உள்ளதாக கூறி மிரட்டியுள்ளார்.

கோயம்புத்தூர்,

டிஜிட்டல் கைது செய்து விட்டதாக மிரட்டி ஓய்வு பெற்ற அரசு பெண் மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ அழைப்பு

கோவை மாநகர பகுதியில் தனது தாயாருடன் வசித்து வரும் ஓய்வு பெற்ற அரசு பெண் மருத்துவருக்கு சில வாரங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தன்னை உயர் காவல்துறை அதிகாரி மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

டிஜிட்டல் கைது

பின்னர் அவர், பெண் மருத்துவர் பெயரில் உள்ள வங்கி கணக்கு மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் நடந்து உள்ளதாக கூறி மிரட்டினார். மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை 10 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. அறைக்கு உள்ளேயே இருக்க வேண்டும். உங்களை 'டிஜிட்டல் கைது' செய்துள்ளோம் என்று கூறினார்.

ரூ.98 லட்சம்

இதையடுத்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க வேண்டி உள்ளது. எனவே அந்த பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு அனுப்ப வேண்டும், விசாரணை முடிந்ததும் அந்த தொகை திரும்ப ஒப்படைக்கப்படும் என்றார். அதை நம்பிய பெண், தனது சேமிப்பு பணமான ரூ.98 லட்சத்தை பல தவணைகளாக மர்ம ஆசாமி கொடுத்த பல வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து உள்ளார்.

போலீசார் விசாரணை

அதன்பிறகு மர்ம ஆசாமியை, பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.