தமிழக செய்திகள்

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பாழடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் - சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பாழடைந்து உள்ளது. இதனை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் நகரி சாலையில், புதுப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் ரூ.4.90 லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த 2004-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் புதுப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து தன் அலுவலக பணிகளை பார்த்து வந்தார். காலப்போக்கில் இந்த கட்டிடம் சிறிது சிறிதாக பழுதடைந்து வந்தது. இதனால் அந்த காலத்தில் இந்த கட்டிடத்தில் குடியிருந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் தனது குடும்பத்தை வேறு இடத்திலும், அலுவலகத்தை மற்றொரு இடத்திலும் இடம் மாற்றிக் கொண்டார்.

தற்போது இந்த கட்டிடம் பாயன்பாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டி வரும் இது போன்ற அரசு கட்டிடங்கள் சிறிது சிறிதாக பழுதடையும் பொழுதே சிறிய தொகையில் அவற்றை சீரமைக்காமல் விடுவதால் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைவதாக அந்த பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த கட்டிடத்தை சீரமடைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT