சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10-ந் தேதி பதவியேற்றார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அரசுப் பணிக்கு ஊழியர்கள் வருவதுபோல், முதல்-அமைச்சர் விஜய்யும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகம் வருகை தந்து, தனது பணிகளை கவனித்து வருகிறார்.
தற்போது, 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அவர், தினமும் ஒவ்வொரு துறைகளின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இடை இடையே முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று (8-ந் தேதி) முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்தித்து பேசினார். அப்போது, முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தினத்தந்தி குழும இயக்குநர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.