தமிழக செய்திகள்

திண்டுக்கல் :15 வயது சிறுமியை சீரழித்த 7 பேர் கைது

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதையும், பிரசவ வலியால் துடிப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல்,

வயிற்று வலி என அரசு மருத்துவமனைக்கு வந்த 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில், 10க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக கூலி தொழிலாளர்கள் 7 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரசவ வலி

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக பெற்றோர் அச்சிறுமியை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதையும், பிரசவ வலியால் துடிப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தை பிறந்தது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். சிறுமிக்கு அழகான குழந்தை பிறந்தது. இதையடுத்து, சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

கூட்டு பலாத்காரம்

மருத்துவமனைக்கு விரைந்து வந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அதில், அச்சிறுமியிடம் பலரும் உடலுறவு கொண்டதால், அவர் கர்ப்பமடைந்ததும் முதற்கட்டமாக தெரியவந்தது. குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளின் புகாரின் பேரில், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியின் தெலைப்பேசியை வாங்கி போலீசார் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது, அந்த சிறுமியை பல கொடூரர்கள் கூட்டு பலாத்காரம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரையே உலுக்கியது.

7 பேர் போக்சோவில் கைது

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முத்தழகுபட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி (45), கிழக்கு ரத வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) உட்பட கூலி தொழிலாளர்கள் 7 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தை, திருப்பூர் பாதுகாப்பு மையத்தில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு, இளம்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.