திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிகளில், புலிகள் மற்றும் இதர வனவிலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. ஆண்டுதோறும் பருவமழைக்கு முந்தைய, பிந்தைய வன விலங்கு கணக்கெடுப்பு பணி நடப்பது வழக்கம். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை தானியங்கி கேமராக்கள் மூலமாக புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வனத்துறை கன்னிவாடி, நத்தம், சிறுமலை, வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம், அய்யலூர்,அழகர் கோவில் ஆகிய 7 சரகங்களிலும் வனவிலங்குகள், புலி வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய வனப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் ஆயத்த பணி துவங்கி உள்ளது.
வன விலங்குகள் நடமாட்டம், வாழ்விடம் அவற்றின் சூழல் சுற்றுப்பாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 7 சரகங்களில் 403 இடங்களில் முதற்கட்டமாக 430 சிசிடிவிகள் பொருத்துவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது.