திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியரை மதுபோதையில் தாக்கி, அவரது மொபைல் போனைப் பறித்த தமிழக வெற்றிக் கழக (தவெக) பிரமுகரைத் தாலுகா போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நாடுகண்டனூர் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் ஜெயலட்சுமி (வயது 40). அவர் தற்போது அரசு உத்தரவுப்படி பாடியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி, பாடியூர் லட்சுமணபட்டி பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று விபரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகரான பாலமுருகன் (வயது 37) என்பவர் மதுபோதையில் அங்கு வந்தார். கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம், "யாரிடம் கேட்டு விபரம் சேகரிக்கிறாய்?" என வம்புக்கு இழுத்தார். ஆசிரியர் ஜெயலட்சுமி தனது அரசு அடையாள அட்டையைக் காண்பித்து அமைதியாகப் பதிலளித்தார்.
எனினும் ஆத்திரமடைந்த பாலமுருகன், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவர் கையில் வைத்திருந்த அரசுப் பணிக்குரிய செல்போனைப் பறித்து பலவந்தமாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர் அலறியடி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை ஜெயலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார், ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய பாலமுருகனை விரைந்து சென்று அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஆசிரியையின் மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அரசுப் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது மதுபோதையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.