ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசனுக்கு வரும் சுற் றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. புகழ் பெற்ற மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவில் குவிந்துள்ளனர்.
இந்தநிலையில் மலர் கண்காட்சியை ஊட்டி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. போஜராஜன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊட்டி மலர் கண்காட்சி அரங்குகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வந்து மலர் கண்காட்சியை பார்வையிடுகின்றனர். எனது மனதில் சிறு வருத்தம் உள்ளது. 128-வது ஆண்டாக நடக்கும் பாரம்பரிய மிக்க மலர் கண்காட்சிக்கு தொடக்க விழா சிறப்பாக நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடந்த ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சரை வைத்து, தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மாவட்ட கலெக்டர் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி தொடக்க விழாவை சிறப்பாக நடத்தி இருக்கலாம். மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையாக அழைப்பு விடுக்காததும், கலெக்டர் வராததும் ஏமாற்றம் அளிக்கிறது. அவ்வாறு சிறப்பாக செய்திருந்தால் மாவட்ட கலெக்டருக்கு பெருமை கிடைத்திருக்கும். இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.