தமிழக செய்திகள்

பள்ளி ஆசிரியர்கள் இடையே தகராறு

பழனி அருகே கிரிக்கெட் விளையாடும்போது பள்ளி ஆசிரியர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

பழனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர், நெய்க்காரப்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அங்கு தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் கவுரிசங்கர் (33). கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் 2 பேருக்கும் இடையே பள்ளியில் நடந்த பிரச்சினையில் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று நெய்க்காரப்பட்டி பகுதியில் மணிகண்டன், கவுரிசங்கர் மற்றும் பலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டனுக்கும், கவுரிசங்கருக்கும் இடையே ரன் எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கவுரிசங்கர், கிரிக்கெட் ஸ்டெம்பால் மணிகண்டனை தாக்கினார். இதில் மணிகண்டனுக்கு கை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து கவுரிசங்கரை கைது செய்தனர். நெய்க்காரப்பட்டியில் ஆசிரியர்களுக்குள் ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.