கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சமைப்பதற்கு பொருட்கள் வாங்குவதில் தகராறு: தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற நண்பர்

சமைப்பதற்கு பொருட்கள் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர்,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண் சானிக் (30 வயது). இவர் திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் தங்கி, அந்த பகுதியில் உள்ள பனியன் பேக்கேஜிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசன்னா (50 வயது) என்பவரும் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந்தேதி இரவு சமைப்பதற்கு பொருட்கள் வாங்குவது தொடர்பாக பிரசன்னாவுக்கும், அருண் சானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பிரசன்னா இரும்பு கம்பியால் அருண் சானிக்கை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அருண் சானிக் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, திருமுருகன்பூண்டி போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரசன்னாவை தேடி வருகின்றனர். திருப்பூரில் பீகார் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.