தமிழக செய்திகள்

கணவருடன் தகராறு: அடி தாங்க முடியாமல் தெருவுக்கு ஓடிய பெண்.. அடுத்து நடந்த கொடூரம்

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

காரைக்குடி,

மனைவியின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்ததில் கல் தூணில் தலை மோதி அப்பெண் உயிரிழந்தார். இந்த கொடூர செயலை செய்த 2-வது கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

திருமணம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37) இவர் கொட்டகை போடும் தொழில் செய்து வந்தார். சாக்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் உய்யவந்தாள் (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இவர் தென்னை ஓலை பின்னும் தொழில் செய்து வந்தார்.

பிரகாஷ் தனது தொழில் ரீதியாக தென்னை ஓலைகளை வாங்க அடிக்கடி உய்யவந்தாளை சந்தித்து வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்த 6 மாதங்களுக்கு முன்பு பிரகாசும், உய்யவந்தாளும் திருமணம் செய்து கொண்டனர். சென்னைக்கு சென்ற இவர்கள் மீண்டும் சாக்கோட்டைக்கு வந்து தங்களது தொழிலை செய்து வந்தனர்.

குடும்ப பிரச்சினை

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பிரகாஷ் ஆத்திரம் அடைந்து மனைவி உய்யவந்தாளை கடுமையாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த உய்யவந்தாளை விரட்டினார்.

கொடூர கொலை

மனைவியின் தலைமுடியை பிடித்து தெருவில் இருந்து வீட்டுக்கு தரதரவென இழுத்துச்சென்றார். அப்போது அங்கிருந்த கல்தூணில் உய்யவந்தாளின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக மனைவி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ், மனைவியின் உடலை வீட்டுக்குள் வைத்துவிட்டு, உடலின் மேலே போர்வையை போர்த்திவிட்டு நேரடியாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.