தமிழக செய்திகள்

கணவருடன் கருத்து வேறுபாடு: இன்ஸ்டாகிராமில் ஆறுதல் கூறி..150 பவுன் நகை, ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர்..!

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சென்னை,

திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி, 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

குடும்பப் பிரச்சினையை கூறிய பெண்

திருவொற்றியூரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (29). இவருக்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

ஆறுதல் கூறி நகை, பணம் பெற்றதாக புகார்

இளம்பெண்ணின் தந்தை பாரிமுனையில் நகைக்கடை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சினைகள் குறித்து ஹரிகிருஷ்ணனிடம் இளம்பெண் கூறிய நிலையில், அவர் ஆறுதல் கூறி, பெண்ணிடம் சிறுகச் சிறுக 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை ஹரிகிருஷ்ணன் பெற்றதாக கூறப்படுகிறது.

கணவர் கேட்டபோது மோசடி வெளிச்சம்

இதற்கிடையே, இளம்பெண்ணின் கணவர் மீண்டும் அவருடன் சேர்ந்தபோது, நகை மற்றும் பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஹரிகிருஷ்ணனிடம் நகை மற்றும் பணத்தை கொடுத்திருப்பதும், அவற்றை அவர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுவதும் தெரியவந்தது.

வாலிபர் கைது

இதையடுத்து, இளம்பெண் திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT