சென்னை,
அன்னை சின்னப்பிள்ளையின் வரலாறு மற்றும் வாஜ்பாயின் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் கீர்த்தனா உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மதுரையைச் சேர்ந்த அன்னை சின்னப்பிள்ளை, 'களஞ்சியம்' சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். இவரது உன்னதப் பணியைப் பாராட்டி, அன்றைய பாரதப் பிரதமர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த 2001-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற 'ஸ்த்ரீ சக்தி' விருது வழங்கும் மேடையில், அன்னை சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கிக் கவுரவித்தார். இது இந்தியாவே வியந்த ஒரு பண்பாட்டுத் தருணம்.
ஆனால், நேற்று சட்டமன்றத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அன்னை சின்னப்பிள்ளையை ஹைட்ராலிக் அமைப்பில் (Hydraulic System) ஆயில் கசியாமல் இருக்க 'O-Ring' கண்டுபிடித்தார் என்றும், அதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அன்னை சின்னப்பிள்ளையின் வீட்டிற்கே சென்று காலில் விழுந்தார் என்றும் ஒரு கற்பனைக் கதையைக் கூறியுள்ளார். வாஜ்பாய் மற்றும் அன்னை சின்னப்பிள்ளை ஆகியோர் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் நகைப்பிற்குரியவை மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியது.
இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் ஒரு தவறான தகவலைப் பதிவு செய்துவிட்டு, அது சமூக வலைதளங்களில் அம்பலமானவுடன், "நேரம் கருதி சுருக்கமாகச் சொன்னேன்" என்று அமைச்சர் கீர்த்தனா இன்று அளித்துள்ள விளக்கம், "முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும்" முயற்சியாகும்.
எனவே, அன்னை சின்னப்பிள்ளையின் வரலாறு மற்றும் வாஜ்பாயின் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் கீர்த்தனா உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும். இனி இதுபோல் ஆதாரமற்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.