தமிழக செய்திகள்

தரமற்ற அரிசி வினியோகம்:ரேஷன் கடை ஊழியர்களுடன், பொதுமக்கள் வாக்குவாதம்

ஆண்டிப்பட்டி அருகே தரமற்ற அரிசி வினியோகம் செய்வதாக கூறி ரேஷன்கடை ஊழியர்களுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி தாலுகா, அரப்படித்தேவன்பட்டி கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 500-க்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று கடையில் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து டோக்கன் வாங்கியவர்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அரிசி தரமற்ற முறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தரமற்ற அரிசியை வாங்கமாட்டோம் என்று கூறி, கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ரேஷன் கடைக்கு வரும் அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வெளிமார்க்கெட்டிற்கு விற்பனை செய்வதாகவும் புகார் கூறி வாக்குவாதம் செய்தனர். தரமான அரிசி வழங்கும் வரை அரிசி வாங்க மாட்டோம் எனக்கூறி பொதுமக்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அரப்படித்தேவன்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT