தமிழக செய்திகள்

ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்த்திட கொசுக்களின் உற்பத்தி இடங்களை கண்டறிந்து நோய் பரவலை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“பருவமழை முன்னேற்பாட்டுப்பணிகள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஐகோர்ட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், கொசு உற்பத்தி தொடர்பாக வரும் ஒவ்வொரு புகாருக்கும் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, அவ்விடங்களில் கொசு ஒழிப்பு பணியாளர்களை ஈடுபடுத்தி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை அகற்றுதல், கொசுப்புழுக்கொல்லி மருந்துகள் தெளித்தல், முதிர் கொசுக்களை கட்டுப்படுத்த புகை அடித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு புகாருக்கும் 48 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள், காட்சிப்பலகைகள் மற்றும் விழிப்புணர்வு அறிவிப்புகள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், சந்தைகள், கோவில்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அறிவிப்புகள் வெளியிட்டு மக்களையும் கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு டெங்கு, மலேரியா, மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய கூட்டம் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு 14.05.2026 அன்று நடந்தது. இதில் முதிர் கொசு வளர் இடங்களைக் கண்டறிந்து இரண்டு வாரங்களுக்குள் அவற்றை முற்றிலும் ஒழிப்பதன் மூலமே கொசுக்களால் பரவும் மழைக்கால நோய்களை பரவாமல் தடுக்க முடியும் என்று மாவட்ட அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.