சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று தரப்புகள் கோரிக்கை வைத்தன.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால், அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளையில், லண்டனில் இருக்கும் சங்கீதா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.