தமிழக செய்திகள்

விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல்: முன்னாள் கணவர் கைது

கோவில்பட்டியில் ஒருவர் கொலை வழக்கில் சிறைக்குச் சென்றதால், அவரது மனைவி நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சேர்மக்கனி (வயது 32). இவருக்கும், இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே கடந்த 2024-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதான சேர்மக்கனி சிறைக்குச் சென்றார். இதனால் அவரது மனைவி நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்குப் பிறகு, அந்தப் பெண் தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த சேர்மக்கனி, தனது முன்னாள் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சேர்மக்கனியைப் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.