தமிழக செய்திகள்

மக்கள் மனதில் இருந்து மறைந்த கட்சி தேமுதிக - சி.டி.ஆர்.நிர்மல்குமார் விமர்சனம்

தேமுதிக கட்சி ஒரு தனியார் கம்பெனி ஆகிவிட்டது என சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணி தொடரும் என்று கூறுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒரு சிலரிடம் பனிப்போர் நிலவி வருகிறது. திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் கோ.தளபதி பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார். ஆனால் திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பது காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை கவுன்சிலர் பதவிக்கு நிற்க வைத்து திமுக கட்சியை சேர்ந்தவர்களே தோற்கடித்தார்கள். அதேபோல காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து அவர்களை வரும், சட்ட மன்ற தேர்தலில் திமுகவை சேர்ந்தவர்களே தோற்கவைப்பார்கள்.

திமுகவுடன் தேமுதிக இணைந்தது பற்றி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு:-

அது கூட்டணி என்று சொல்லும் நிலைமையில் இல்லை. அது ஒரு தனியார் கம்பெனி, ஒரு குடும்பத்தின் கீழ் வந்துவிட்டது. மக்கள் மனதில் இருந்து மறைந்த கட்சி, கேப்டன் விஜயகாந்தின் கொள்கைக்கு எதிராக என்று அந்த கட்சி சென்றதோ அதன் பிறகு மக்கள் மனதில் இருந்து அந்த கட்சி மறைந்து விட்டது. அது ஒரு தனியார் கம்பெனி ஆகிவிட்டது. தேமுதிக கடந்த பத்து வருடத்திற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலிலேயே ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றது.தமிழக வெற்றி கழகத்தை பார்த்து பயந்து சிறிய கட்சிகளுடன் திமுகதலைவர் கூட்டணி அமைத்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்