சென்னை,
தேமுதிகவின் கொடி நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று கொடியை ஏற்றி வைத்தார். தேமுதிக கடந்த 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி தேமுதிகவினரால் கொடி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் இன்று காலை தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த், அவரது இல்லத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அக்கட்சியின் துணை செயலாளர் இல்லம் அமைந்துள்ள சாலிகிராமத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்து கொடி ஏற்றினார். அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் திறந்த வாகனத்தில் வந்து அனைவரையும் சந்தித்ததால், அவரது தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த், சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.