சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அதேவேளை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன. தமிழகத்தில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 37 மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கிய நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 5ம் தேதியாகும்.
மாநிலங்களவை தேர்தலை பொறுத்தவரை தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 எம்.பி.க்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பிக்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் யார்? யாரை களமிறக்குவது குறித்து திமுக, அதிமுக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் சுதீஷ் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.